ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தமிழக எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் ராஜ்யசபா முடக்கப்பட்டது.
இன்று காலை மக்களவை கூடியதும் தமிழக எம்பிக்கள் இது தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர். அப்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுந்து பதிலளித்தார். ஆனால் அதை தமிழக எம்.பிக்கள் ஏற்காமல் தொடர்ந்து கோஷமிட்டனர். இருப்பினும் அதனை லோக்சபா சபாநாயகர் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து கூட்டத்தை நடத்தினார்.
மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இவ்விவகாரத்தை இன்று எழுப்பினார். அ தி.மு.க.வின் மைத்ரேயனும் தமிழக மக்களின் கருத்தை வெளிப்படுத்தி பேசியதுடன் அவையில் அமர்ந்திருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால் அப்போதும் பிரதமர் மன்மோகன்சிங் மௌனமாகவே இருந்தார். திமுகவின் எம்பியான திருச்சி சிவாவும் ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தினார். மன்மோகன்சிங் வாயைத் திறந்து, அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூற திமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்துப் பார்த்தனர். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
இதேபோல் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடுவும், சிறீலங்காவின் இனப்படுகொலையை இந்திய அரசு வேடிக்கை பார்க்க முடியாது என்று கூறி தமிழக எம்பிக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பில் பேசிய அமைச்சர் பவன்குமார் பன்சால், ஜெனீவா தீர்மானத்தில் என்ன கூறபட்டுள்ளது என்று தெரியவில்லை. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதை நிராகரித்த தமிழக எம்பிக்கள், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி தொடர்ந்து குரல் எழுப்பினர். இதனால் மாநிலங்களவை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
Tuesday, March 13, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment