flashvortex.

Thursday, March 22, 2012

கைவிட்டது மேற்குலகம் - தோல்வியை நோக்கி நகரும் சிறீலங்காவின் பரப்புரை

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பெரும்பாலும் அமெரிக்கா இன்று சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சிறீலங்கா அரச பிரதிநிதிகள் கலக்கத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை எதிர்கொள்ள பல்வேறு மாற்றுவழிகளை மேற்கொள்வதாகவும் தெரிய வருகின்றது.

சிறிலங்கா தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் வரைபு ஏற்கனவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது.
எனினும் அதில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், இறுதித் தீர்மானம் இன்று பெரும்பாலும் சபையின் விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடும் என்று ஜெனிவா இராஐதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கும் நிலையில் 7 நாடுகள் மாத்திரமே இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில் சீனா, ரஸ்யா, கியூபா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளே தற்போது சிறிலங்காவுக்கு ஆதரவாக நிற்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தை பெரும்பாலான நாடுகள் புறக்கணித்துள்ளன.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் தூதுவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை இரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த இராப்போசன விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்.

அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும், 7 நாடுகளின் தூதுவர்கள் மட்டும் அதில் பங்கேற்றதாகவும் ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment