flashvortex.

Monday, March 19, 2012

அணுசக்தி தேவையில்லை: 80% ஜப்பானியர்கள் கருத்து

அணுசக்தி தேவையில்லை என்று 80 சதவீத ஜப்பானியர்கள் ஓர் ஆய்வில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பானின் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் ஓராண்டுக்கு முன் விபத்து ஏற்பட்டது. இதனால், அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில், அணுசக்தி தேவையா என்று நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள் இணைந்து பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தின.
 3,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 80 சதவீதம் பேர் அணுசக்தி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் அணுசக்தி தேவை எனக் கூறியுள்ளனர்.
 அணுசக்தி தேவையில்லை என்றால் மின் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று தொழிலதிபர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதை அணுமின் நிலையத்துக்கு அருகில் வசிப்போர் கடுமையாக எதிர்க்கின்றனர்.
 எனினும், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க குறுகிய காலத்துக்கு மட்டும் (மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்வரை) அணு உலைகளை செயல்படுத்தலாம் என்று 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
 சேதமடைந்த ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து வெளியான கதிர்வீச்சு தடுக்கப்பட்டு, அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று அரசு அறிவித்துள்ளபோதும், அது குறித்து 92 சதவீத மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
 பிரதமர் யோஷிகிஹோ நோடா இந்த ஆண்டின் இறுதியில் எரிசக்திக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர உள்ளார். அதில், அணுசக்தியைச் சார்ந்துள்ள நிலையை குறைத்துக்கொள்ளும் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment