இந்திய மாநிலம் ஒரிசாவில் அரசியல்வாதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். ஒரிசா சட்டசபை உறுப்பினரான ஜினா ஹிக்காகா இன்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். காரின் ஓட்டுனரையும் காவலரையும் விட்டுவிட்டு சட்டசபை உறுப்பினரை மட்டும் ஆயுததாரிகள் கடத்திச்சென்றுள்ளனர்.தலைநகர் புபனேஷ்வரில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இடமொன்றில் இவர் காரில் சென்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வாரம் இத்தாலியர்கள் இருவர் கடத்தப்பட்ட போது மாவோயிஸ்ட்டுகள் விதித்திருந்த அதேவிதமான நிபந்தனைகள் அடங்கிய துண்டுப்பிரசுரமொன்றையும் ஆயுததாரிகள் விட்டுச்சென்றுள்ளனர்.
இந்தக் கடத்தலும் மாவோயிஸ்ட்டுகளின் வேலையாகவே இருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற காவல்துறையினர், இத்தாலியர்களைக் கடத்திய அதே அணிதான் இதிலும் ஈடுபட்டதா என்பதைக் கூறமுடியாது என்று அறிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட இத்தாலியர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக மாவோயிஸ்ட்டுகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை அரசாங்க அதிகாரிகளை சந்திக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment