flashvortex.

Tuesday, March 20, 2012

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் பிரதமரின் பதிலில் திருப்தியில்லை: ஜெ.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல், தெளிவற்ற ஒரு பதிலை பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தவர்களை, போர் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐ.நா., சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்; சிங்களர்களுக்கு சமமாக, தமிழர்கள் கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை, இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிப்பதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு செயல்பட வேண்டும் என்றும், தமிழக சட்டசபையில் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை அரசைக் கண்டித்து, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தின் மீது இந்திய அரசு, இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படும் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வந்தவுடன், கடந்த மாதம் 2ம் தேதி, எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து, பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
ஐ.நா., சபையின் மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று, நான் கடிதங்கள் எழுதிய நிலையில், தன் மீது மீண்டும் பழி ஏற்படக் கூடாது என்று எண்ணி, கருணாநிதி ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றும் விதமாக, பிரதமருக்கு கடிதங்கள் எழுதினார். இதுபோன்ற கபட நாடகங்களை நிறைவேற்றுவது அவருக்குக் கைவந்த கலை.கடந்த 2009ல், மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தால், அப்பாவித் தமிழர்கள் இலங்கை அரசின் குண்டு மழைக்குப் பலியாகி, கொன்று குவிக்கப்பட்டதை நாடே நன்கு அறியும்.

இதுபோன்ற ஒரு நாடகத்தை, கடந்த 3ம் தேதி, தி.மு.க., உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டி, மீண்டும் அரங்கேற்றினார். கடந்த 19ம் தேதி காலை, ஐ.நா., சபையின் மனித உரிமைக் குழுவில் அமெரிக்காவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 22ம் அன்று மாவட்டங்களில் தி.மு.க., உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும். சென்னையில் என் தலைமையில் உண்ணாவிரதம் நடக்கும் என அறிவித்தார். இந்நிலையில், இந்த முறை உண்ணாவிரத நாடகத்தைக் கூட அரங்கேற்றாமலேயே இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் கூறியதாகச் சொல்லி, தன் உண்ணாவிரதப் போராட்டத்தை கருணாநிதி கைவிட்டு விட்டார்.இந்நிலையில், நேற்று பார்லிமென்டில் பிரதமர், அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வடிவம் தன்னிடம் இல்லை என்று கூறிவிட்டு, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை , சம அந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிலில் பிரதமர், மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது ஒரு மழுப்பலான, பயனில்லாத ஒரு பதில்.

கருணாநிதி, உண்ணாவிரதம் இருந்தபோது, நாடகத்தில் ஒரு பாத்திரமாக சிதம்பரம் இருந்து, அந்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொடுத்தார். அதே போன்று, தற்போது பிரதமர் கருணாநிதியின் கபட நாடகத்திற்கு துணை போகும் வகையில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல் தெளிவற்ற ஒரு பதிலைக் கூறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த கருணாநிதி, மீண்டும் மீண்டும் இதுபோன்ற கபட நாடகங்களை அரங்கேற்றாமல் இருப்பது தமிழர்களுக்கு அவர் செய்யும் பேருதவி.இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment