flashvortex.

Thursday, March 8, 2012

சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானம் - அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிப்பு

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைபை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் இந்தத் தீர்மான வரைபு, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை வரைந்து, அதனை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் உதவிகளை பெற்று நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறது.
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை அடுத்த ஆண்டின் முதலாவது கூட்டத் தொடரில் முன்வைக்க வேண்டும் என்றும் இந்த வரைபில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பான துணை மாநாடு ஒன்றையும் அமெரிக்கா இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்பாடு செய்துள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மான வரைபு நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தீர்மான உள்ளடக்க வரைவு தொடர்பான, உறுப்புநாடுகளின் கருத்துக்களுடன், இந்தத் தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும்.

தீர்மான வரைபு: சிறிலங்காவில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)

ஐக்கிய நாடுகள் சாசனம், அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக,

பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் அனைத்துலக விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான அனைத்துலக மனிதஉரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்,

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இந்த அறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்,

சட்டத்துக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்டஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று,

அனைத்துலக சட்டவிதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்தில் கொண்டு,

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன்- நீதி, பொறுப்புப்கூறுதல், அனைத்து சிறிலங்கர்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் சிறிலங்கா அரசைக் கோருதல்.

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருதல்

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும், சிறிலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டுவதுடன், வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை மனிதஉரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

No comments:

Post a Comment