சிபீ கிண்ண முக்கோண தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 11வது போட்டியில் இந்திய அணி அபாரமாகவும் அதிரடியாகவும் ஆடி மேலதிக புள்ளிடன் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் 321 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 36.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 321 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் மிக அபாரமாக ஆடிய விராத் கோலி 86 பந்துகளை மாத்திரம் சந்தித்து 133 ஓட்டங்களைப் பெற்றார்.
அத்துடன், கம்பீர் 63 ஓட்டங்களையும், சுரேஸ் ரெய்னா 40 ஓட்டங்களையும், சச்சின், செவாக் முறையே 39, 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அதன் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும் அவருக்கு பக்கபலமாக ஆடிய குமார சங்கக்கார 105 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
திலகரட்ன தில்ஷான் அவுஸ்திரேலிய மண்ணில் இன்று முதலாவது சதத்தைப் பெற்றதுடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக விராத் கோலி தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சிபீ கிண்ண தொடரில் 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளதன்படி புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில் திகழ்வதோடு, இலங்கை மற்றும் இந்திய அணிகள் தலா 15 புள்ளிகளைப் பெற்று முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.
எனினும் ஓட்ட சராசரி விகிதத்தின்படி இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. இலங்கை அணி 15 +0.162 புள்ளிகளையும் இந்திய அணி 15 -0.593 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
இதன்படி மார்ச் 2ம் திகதி இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் மாத்திரமே இறுதிப் போட்டிக்கு தெரிவாவது உறுதியாகும்.
ஆனால் இலங்கை அணி படுதோல்வியடைந்தால் சராசரி ஓட்ட விகிதப்படி பின்னிலைக்குச் சென்று இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, February 28, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment