flashvortex.

Monday, February 27, 2012

சர்ச்சையை ஏற்படுத்திய சச்சினின் ஆட்டமிழப்பு

சிட்னி ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு ஆட்டமிழப்பு கொடுக்கப்பட்டதும், டேவிட் ஹசிக்கு ஆட்டமிழப்பு மறுக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.நேற்று இந்தியா துடுப்பெடுத்தாடிய போது 7வது ஓவரை பிரட் லீ வீசினார். காம்பிர் ஒரு ஓட்டத்திற்காக சச்சினை அழைத்தார்.
 
மறுமுனையில் இருந்து சச்சின் ஓடி வரும் போது இடையில் புகுந்த பிரட் லீ தேவையில்லாமல் இடையூறு செய்தார். அதற்குள் வார்னர் பந்தை நேரடியாக த்ரோ செய்ய சச்சின் ஆட்டமிழந்தார். இதற்கு சச்சின் அதிருப்தி தெரிவித்தார். ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள் பில்லி பவுடன், சைமன் டாபெல் ஆட்டமிழந்தார் என அறிவித்தனர்.
முன்னதாக அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடிய போது, 24வது ஓவரை அஷ்வின் வீசினார். கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க அழைத்தார் மாத்யூ வேட். மறுமுனையில் இருந்து டேவிட் ஹசி ஓடி வரும் போது, ரெய்னா பந்தை எறிந்தார்.
 
அதனை வலது கையால் தடுத்தார் ஹசி. ஆட்டமிழப்பில் இருந்து தப்பிக்க, பந்தை கையால் வேண்டுமென்றே தடுப்பது கிரிக்கட் விதிப்படி தவறு. இதையடுத்து தோனி மேல்முறையீடு செய்தார்.
 
நடுவர்கள் பில்லி பவுடன், சைமன் டாபெல் விவாதித்தனர். பின் மூன்றாவது நடுவர் சைமன் பிரையிடம் கேட்கப்பட்டது. தன் மீது பந்துபட்டு காயம் ஏற்படுவதை தவிர்க்க தான் ஹசி தடுத்தார். அவுட்டில் இருந்து தப்புவதற்காக அல்ல என்று கூறினார் மூன்றாவது நடுவர்.
 
இதனை ஏற்க மறுத்த தோனி, நடுவர் பவுடனிடம் நீண்ட நேரம் விவாதித்தார். அப்போது ஹசி 17 ஓட்டங்கள் தான் எடுத்திருந்தார். அதன் பின் அரைசதம் கடந்து, இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
 
இதுகுறித்து அணித்தலைவர் தோனி கூறுகையில், பிரட் லீயின் செயலில் நியாயமில்லை. இவர் சச்சினுக்கு இடையில் புகுந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் கூடுதல் தூரம் ஓடி, ஆட்டமிழக்க நேர்ந்ததால், சச்சின் மிகுந்த ஏமாற்றமடைந்தார். சம்பவத்தை பார்த்த நடுவர் பில்லி பவுடன் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும்.
 
டேவிட் ஹசியை பொறுத்தவரை அவர் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. தனது முகத்தில் பந்து படுவதை தடுப்பது போல காட்டினார். ஆனால் அவரது கை மிகவும் நீண்டு இருந்தது. பந்தை தடுத்தது நன்கு தெரிந்தது. இவருக்கு ஆட்டமிழந்தார் என்று ஏன் அறிவிக்கவில்லை.
 
இந்த இரண்டு சம்பவங்களிலும் இந்திய அணிக்கு தான் பாதிப்பு அதிகம். கால்பந்து விளையாட்டில் வீரர்களின் கை, பந்தில் பட்டால் பெனால்டி தரப்படும். மொத்தத்தில் நடுவர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை.

No comments:

Post a Comment