flashvortex.

Sunday, April 22, 2012

இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம் கூறுவதென்ன?

இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவினர் தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்கள்.

இலங்கையில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில், அங்கு மக்கள் மறுவாழ்வுப் பணிகளும், நீடித்து நிலைக்கக்கூடிய அமைதிக்கான வழிமுறைகளும் எந்த மட்டத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்காகவே தங்களது இந்தப் பயணம் அமைந்திருந்ததாக சுஷ்மா ஸ்வராஜ் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அதேபோல நாட்டின் பல பாகங்களிலும் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் பற்றியும் நேரடியாக பார்த்துவர வேண்டுமென்றும் தாங்கள் எண்ணியிருந்ததாக சுஷ்மா ஸ்வராஜ் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றங்களில் முன்னேற்றத்தைக் காணமுடிந்ததாகவும், இருந்தாலும் அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் இடைத்தங்கல் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தான் இன்னும் இருப்பதாகவும் இந்திய பாராளுமன்றக் குழு கூறுகிறது.

அந்த மக்களின் முழுமையான மீள்குடியேற்றத்தின் பின்னர் தான் மறுவாழ்வுப் பணிகள் பூர்த்தியடையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் இப்போது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்ட சூழ்நிலையில் அங்கு தேசிய இணக்கப்பாடு மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் நோக்கிச் செல்வதற்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று இந்தியா கருதுகிறது.

அதற்காக அண்மையில் நல்லிணக்க ஆணைக்குழு (எல்எல்ஆர்சி) முன்வைத்த பரிந்துரைகளுக்கு அவசரத் தேவை கருதி முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை தமது தரப்பு இலங்கைத் தரப்புக்கு எடுத்துரைத்துள்ளதாகவும் இந்திய குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உள்வாங்கக்கூடிய அர்த்த பூர்வமான அதிகார பகிர்வுத்திட்டத்தை எட்டுவதற்கு தற்போதுள்ள சூழலை இலங்கை அரசு சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் இந்திய பாராளுமன்றக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிகாரப் பகிர்வு விடயத்தில் ´இலங்கை அரசியலமைப்பின் 13ம் திருத்தத்துடன் இன்னும் சில விடயங்களும் சேர்க்கப்படும்´ என்ற அணுகுமுறையை ஒட்டி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் என்று இலங்கை அரசு ஏற்கனவே கடந்த காலங்களில் வாக்குறுதி அளித்துள்ளதை இந்தியா விஜயத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றபல தரப்பினரும் அரசியல் தீர்வுத்திட்டம் பற்றிய பேச்சை முன்னெடுக்க வேண்டுமென்றும் இந்திய பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

இந்த விஜயத்தின் முடிவில் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிக்கப்படாத, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண சம்மதம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கை சென்ற இந்தியக் குழுவினர் இலங்கை அரசின் நடவடிக்கைகளால் முழுமையாக திருப்தியடையவில்லை என்று டில்லியிலுள்ள தெற்காசியவியல் துறை பேராசிரியர் சஹாதேவன் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment