flashvortex.

Saturday, December 17, 2011

ரத்மலனையில் ஓர் அற்புத திருநந்தீஸ்வரம்!

ரத்மலானையிலிருந்து கடற்கரையோரமாக சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது திருநந்தீஸ்வரம் ஆலயம். இலங்கையின் பெரும்பாலானோர், இவ்வாறானதொரு ஆலயம் இருப்பதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மிகப் பழைமை வரலாறு கொண்ட இந்த ஆலயத்தின் சுவடுகள் இன்னமும் அழியாமல் இருப்பது இறைசக்தி என்றே கணிப்பிட முடியும்.
திருநந்தீஸ்வரம் ஆலயம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். பெரும்பாலான சிங்கள மக்கள் செறிந்துவாழும் அப்பகுதியிலுள்ள இந்த ஆலயத்தை ‘ கொனா கோவிலய(நந்திக் கோயில்’ என்றே அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
வித்தியாசமான அமைதி பொருந்திய இடமாக கோயில் வளாகம் இருக்கிறது. சுமார் 1000 வருடங்கள் பழைமையான ஆலமரம் இன்னும் கோயிலுக்குச் சான்றாக விளங்குகிறது.
போர்த்துக்கேயர் காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டி வாழ்ந்த இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாக இந்த ஆலயம் விளங்கி வந்துள்ளது.


போர்த்துக்கேயரின் அடாவடித்தனம்
இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலங்களை இல்லாதொழிக்கும் நோக்கில் போர்த்துக்கேயர் பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் 1518 ஆம் ஆண்டு நந்தீஸ்வரம் ஆலயம் முற்றுமுழுதாக போர்த்துக்கேயரினால் நிர்மூலமாக்கப்பட்டது. அங்கு பூஜைகளை நடத்திவந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அந்த இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்தனர். அவருடைய மகனை மதம் மாறுமாறு பலாத்காரமாக அழைத்துச் சென்றனர்.
அதன் பிறகு அப்பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவர் கோயிலைப் பராமரித்து வந்துள்ளார். பெர்னாண்டோ என்ற குடும்பப் பெயருடன் வழிவந்தவர்களே பரம்பரை பரம்பரையாக இன்றுவரை கோயிலைப் பராமரித்து வருகின்றனர்.
போர்த்துக்கேயர் கோயிலை அழித்ததை நினைவுகூருமுகமாக அங்கு சித்திரங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன.
இராமாயணக் காலத்தில் இராமபிரான் வழிபட்ட சிவத்தலமாக இந்த நந்தீஸ்வரம் கருதப்படுகிறது.
1454 ஆம் ஆண்டு தொடகமுவே ஸ்ரீ இராகுல தேரர் என்ற பௌத்த துறவி ‘சலலிஹினி சந்தேசய’ எனும் காவியத்தை இயற்றினார். அந்தக் காவியத்தில் இந்த ஆலயம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் பூஜை வழிபாட்டு முறைகள் பற்றியும் அங்கு தமிழ் மொழிப் பிரயோகம் பற்றியும் அந்த நூலில் துறவி எழுதியுள்ளார்.
இந்தத் தகவல்களை வைத்துப் பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
கதிர்காமத்தில் உள்ளது போன்றே வழிபாடுகள்
ஆலய வளாகத்தில் பௌத்த வழிபாட்டு நிலையத்தை ஒத்ததாக முருகனுக்கு ஓர் ஆலயம் அமைத்திருக்கிறார்கள். அங்கு கதிர்காம முருகன் ஆலயத்தைப் போன்று பூஜை முறைகள் நடைபெற்று வருகின்றன. அதனையும் பாரம்பரியமாக சிங்களவர்களே நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கதிர்காமக் கந்தனுக்கு எடுக்கும் பெருவிழாவாக பல்வேறு விழாக்கள் இந்த ஆலயத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இவ்வாறு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு ஆலயம் புனரமைக்கப்பட்டு வருவதற்கு ஒரு பின்னணியும் உண்டு.
கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் 50 வருடங்களுக்கு மேல் பிரதம சிவாச்சாரியாராக கடமையாற்றி இலங்கைக்கு நிறைவானதொரு சமயப் பணி செய்தவர் குஞ்சிதபாத குருக்கள். இவரது கனவில் தோன்றிய சிவன் தான் இன்னும் நந்தீஸ்வர ஆலய வளாகத்தில் இருப்பதாகவும் தனக்கு கோயில் எழுப்புமாறு சிவன் கூறியதாகவும் வரலாறு கூறுகின்றது.
அதன் பின்னர் 1980 களில் பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் சிவன் ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.
ஆதிகால எழுத்துக்களால் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் இன்னமும் அப்பகுதியில் காணப்படுகின்றன. கோயிலுக்கு அருகில் மிகப்பெரிய குளம் ஒன்று இருந்ததாகவும் பல ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதி மக்களின் தீர்த்தமாக அந்தக் குளம் இருந்ததாகவும் பெர்னாண்டோ குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
அதன் பின்னர் இந்த ஆலயத்தின் மகத்துவம் வெளிப்படத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில், இந்த ஆலயத்துக்கு அந்த குருக்களே அடிக்கல் நாட்டிவைத்து திருப்பணியை தொடங்கிவைத்தார்.
ஆலயத் திருப்பணிகள்
தற்போது கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி உள்ளிட்ட ஏனைய அகழ்வுகள் பக்தியுடன் ஆலயத்தில் பேணப்படுகின்றன.
ஆதாரபூர்வமாக எழுத்தில் எதுவும் காணப்படாத போதிலும் அகழ்வுகளின் மூலம் கிடைத்த சான்றுகள் இந்த ஆலயத்தின் பழைமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் காரைநகரைச் சேர்ந்த திருமதி கனகசபை கோயில் திருப்பணிகளை முன்னின்று செய்துவருகிறார்.
ஆலயத்தின் தொன்மைத் தன்மை சிதைக்கப்படாத வண்ணம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எனினும் இந்த ஆலயத்தின் வரலாறு சரியான முறையில் தொகுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

No comments:

Post a Comment