flashvortex.

Sunday, January 29, 2012

சவேந்திர சில்வாவுக்கான பதவி - சீற்றத்தில் சர்வதேசம்!

வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அனைத்துலக ரீதியாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக மேற்குலக நாடுகள் இந்த நியமனத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளதுடன், போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது எனவும் அவை கருத்து வெளியிட்டுள்ளன.


ஐ.நா அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நியமனத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வழங்கவில்லை என்று அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார்.  

நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் இது குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி, 

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு நியமித்தது ஐ.நா பொதுச்செயலர் அல்ல. அவரை ஆசிய பசுபிக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகள் தான் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்தன என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே இந்த நியமனம் தொடர்பாக ஐ.நாவிடம் இருந்து அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடப்படுவதற்கு முன்னதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவே கொழும்பிலுள்ள ஊடகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றிய தகவலை அறிவித்துள்ளார் என்று கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment